
கோலாலம்பூர் – மே-27 – உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயிலின் வாட்சப் கணக்கு ஊடுருவப்பட்டுள்ளது. இதையடுத்து அதிகாரத் தரப்பிடம் உடனடியாக புகார் செய்யப்பட்டதாக அவரின் அலுவலகம் அறிக்கையொன்றில் கூறியது.
எனவே, சைஃபுடின் பெயரில் வாட்சப் வாயிலாக குறுந்தகவல் வந்தாலோ அல்லது அழைப்பு வந்தாலோ எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொது மக்களை அது கேட்டுக் கொண்டது. குறிப்பாக அவ்வழைப்பு பண விஷயம் பற்றியதாக இருந்தாலோ அல்லது நேரில் சந்திக்க அழைத்தாலோ மிக மிக விழிப்புடன் இருக்க வேண்டும். எளிதில் ஏமாந்து விடக் கூடாது என அது நினைவுறுத்தியது.