கோலாலம்பூர், ஜன 19 – AP பெர்மிட் அங்கீகாரம் ரத்தானால் பொருட்களை பயனீட்டாளர்கள் குறைந்த விலையில் வாங்க முடியும் என மைடின் பேரங்காடியின் நிர்வாக இயக்குனர் அமிர் அலி தெரிவித்திருக்கிறார். AP எனப்படும் ஏற்றுமதி பெர்மிட்டும் IP எனப்படும் இறக்குமதி பெர்மிட்டும் ரத்துசெய்யப்பட்டால் அல்லது குறைக்கப்பட்டால், உள்நாட்டு பேரங்காடியில் சுதந்திரமான சந்தையை ஏற்படுத்த முடியும் என அவர் கூறினார். தற்போது வெளிநாட்டிலிருந்து பல பொருட்களை இங்கு கொண்டு வருவதில் பல தடைகள் இருப்பதாக கருதுகின்றனர் என அவர் கூறினார். சுதந்திரமான சந்தை உருவாக்கப்பட்டால் அதிகமானோர் குறைந்த விலையில் பொருட்களை வாங்க முடியும் . குறிப்பாக உணவுப் பொருட்களுக்காக AP லைசென்ஸ் நீக்கப்பட்டால் உணவுப் பொருட்களின் விலை குறையும் என அமிர் அலி கூறினார்.
பெர்மிட் மூலம் சிலர் மட்டுமே பொருட்களை நாட்டிற்கு கொண்டுவர முடியும். இறக்குமதி செய்வதாக இருந்தால் அரசாங்கத்திடம் அனுமதி கேட்க வேண்டும். அரிசியும் இப்படித்தான். இப்போது 10 கிலோ அரிசியை 42 ரிங்கிட்டிற்கு விற்பனை செய்கிறோம். தாய்லாந்தில் 34 ரிங்கிட்தான். ஆனால் அதனை தாம் இங்கு கொண்டு வரமுடியாது. தாய்லாந்து அரிசியை இங்கு கொண்டுவருவதற்கு அனுமதித்தால் தம்மால்கூட அந்த விலைக்கு அரிசியை விற்க முடியும் என அவர் கூறினார்