
தம்பின், பிப்ரவரி 5 – நெகிரி செம்பிலான் தம்பினில் ஜனவரி 31-ஆம் தேதி நடைபெற்ற திருமண நிகழ்வில், Catering நிறுவனம் அதாவது திருமண உணவு சேவை வழங்குபவர்கள் இறுதி நேரத்தில் வராமல் மாயமானதால், புதுமண தம்பதியினருக்கு 11,000 ரிங்கிட்டுக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
திருமண நாளின் அதிகாலை 4 மணிக்கு அந்த catering நிறுவனம் நடத்தும் பெண், உணவு வழங்க முடியாது என புலனத்தில் செய்தி அனுப்பியுள்ளார். அதன் பின்னர் அவரை தொடர்புகொள்ள முயன்றபோதும், அழைப்புகளும் செய்திகள் அனைத்தும் தோல்வியடைந்தன என மணமகளின் சகோதரி கூறியுள்ளார்.
இதனால் குடும்பத்தினர் அவசரமாக வேறு ஒரு உணவு வழங்குபவர்களை ஏற்பாடு செய்தனர். 500 பேருக்கு உணவு வழங்குவதற்கு, மணமகளின் தாயார் தங்க வளையலை அடகு வைத்து, இரண்டு மாற்று caterer-களுக்கு 6,000 ரிங்கிட் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
முன்னதாக பேசி வைத்திருந்த சமையல்காரருக்கு 6,250 ரிங்கிட் ஒப்பந்தமாக நிர்ணயிக்கப்பட்டு, அதில் 5,800 ரிங்கிட் ஏற்கனவே செலுத்தப்பட்டு விட்டது.
மேலும், அதே நாளில் மூன்று திருமணங்களுக்கு ஒப்பந்தம் எடுத்திருந்த அந்த caterer, எந்த திருமணத்திற்கும் வரவில்லை என்றும், இதுபோல் மேலும் இரண்டு குடும்பங்களும் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பாக, மணமகள் Gemenceh போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். செலுத்தப்பட்ட 5,800 ரிங்கிட் தொகையைத் திருப்பி வழங்க வேண்டும் என்பதே குடும்பத்தினரின் முக்கிய கோரிக்கையாக இருக்கின்றது.



