
செப்பாங், மே-3-KLIA 2 விமான முனையத்தில் நேற்று முன்தினம் 30 வயது வெளிநாட்டு ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்தார்.
அதே இடத்தில் சீன நாட்டுப் பெண்ணொருவர் விழுந்து பலியான சில மணி நேரங்களில் நிகழ்ந்த இந்த இரண்டாவது சம்பவம் சமூக வலைத் தளங்களில் வைரலாகியுள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு 9.10 மணியளவில் மூன்றாவது தளத்தின் வெளிப்பக்க பால்கனியில் தனது முதுகுப் பையை வைத்து விட்டு, பாதுகாப்புத் தடுப்பைத் தாண்டி அவர் குதித்துள்ளார்.
சைபர்ஜெயா மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட அந்த அல்ஜீரிய ஆடவர் சனிக்கிழமை அதிகாலை மரணமடைந்ததாக, KLIA போலீஸ் தலைவர் எம். ரவி கூறினார்.
மரணத்திற்கான காரணம் கண்டறியப்பட்டு வரும் நிலையில், தற்போதைக்கு இச்சம்பவம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக ரவி சொன்னார்.
முன்னதாக, சீன நாட்டுப் பெண்ணொருவர் அதே மூன்றாவது மாடியில் அழுதுகொண்டும் ஆக்ரோஷமாகவும் நடந்துகொண்ட நிலையில், அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
கடைசியில் அவர் கீழே விழுந்து உயிரிழந்தார்.
இப்படி அடுத்தடுத்து 2 உயிரிழப்புகள் KLIA-வில் பதிவாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



