
கோலாலம்பூர், ஆகஸ்ட்-2 – கிள்ளானில் அமுலாக்கத்துறை அதிகாரிகளின் நடவடிக்கையின் போது ‘Rocky’ என்ற வளர்ப்பு நாய் உயிரிழந்த சம்பவத்தில், கிள்ளான் மாநகர மன்றத்தை அத்தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சாந்தியாகோ கடுமையாக விமர்சித்துள்ளார்.
நாய் உரிமையாளரின் மீது குற்றம் சாட்டுவது மக்கள் கொந்தளிப்பை அதிகப்படுத்தும் என்றும், இச்சம்பவம் குறித்து நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த புதன்கிழமை இரவு கிள்ளானில் நடைபெற்ற அமுலாக்க நடவடிக்கையின் போது, அதிகாரிகள் நாயைக் கட்டுப்படுத்த முயன்றபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
நாய் உரிமையாளர் பதற்றத்தில் கயிற்றை வெட்ட முயன்று அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், நாயை உடனடியாக விடுவிக்க முடியாமல் அது உயிரிழந்ததாக, MBDK எனப்படும் கிள்ளான் அரச மாநகர மன்றம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதன் இந்த விளக்கத்தை “அலட்சியமானது” என சார்ல்ஸ் சாடியுள்ளார்.
உயிருக்கு போராடும் தன் வளர்ப்பு நாயைக் காப்பாற்ற முயன்ற உரிமையாளரை “கொடுமைக்காரர்” எனச் சித்தரிப்பது அதிகாரிகளின் தவறை மறைக்கும் செயல் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது வெளிப்படையான விசாரணை நடத்தப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் மத்தியிலும் விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள
இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் புகார் அளிக்கப்பட்டுள்ளதுடன், மேல் விசாரணைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.



