![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/MixCollage-30-Jun-2024-01-00-PM-4314.jpg)
கோலாலம்பூர் , ஜூன் 30 – பூசாட் பண்டார் உத்தாரா (Pusat Bandar Utara) கோலாலம்பூர் மொத்த விற்பனை மார்க்கெட்டில் Taugeh எனப்படும் பயிற்ற முளைகள் எலிகள் எளிதில் அணுகக்கூடிய அசுத்தமான தரையிலும் , இயந்திரங்கள் மற்றும் வடிகால் அருகே தரை முழுவதும் பரவியிருப்பதை கோலாலம்பூர் மாநகர் மன்ற அதிகாரிகள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் பயிற்ற முளைகளை பதப்படுத்தும் தொழிலாளர்கள் அசுத்தமான தரையில் இருந்து சேகரித்து மீண்டும் அதனை விற்பனைக்கு பேக் செய்கின்றனர். பயிற்றமுளைக்கான இரண்டு செயலாக்க வளாகங்களையும்; தூய்மையற்ற நிலையில் இருந்த இரண்டு இறைச்சி கூடங்களையும் மூடிவிட்டதாக கோலாலம்பூர் மாநாக மன்றம் தனது முகநூலில் பதிவிட்டுள்ளது. ஒரு வளாகத்தின் உரிமமும் ரத்து செய்யப்பட்டதோடு 16 குற்றப் பதிவுகளை அதிகாரிகள் வழங்கினர்.
இறைச்சிக் கூடங்களைப் பொறுத்தவரை, அதன் தொழிலாளர்கள் கோழி இறகுகள் மற்றும் இரத்தத்தை நேரடியாக வடிகால் பகுதியில் அப்புறப்படுத்தியதையும் மாநகர் மன்ற அதிகாரிகள் கண்டனர். தொழிலாளர்களுக்கு டைபாய்டு (typhoid) தடுப்பூசிகள் போடப்படவில்லை என்பதையும் அதிகாரிகள் அறிந்தனர். அனைத்து வணிக உரிமையாளர்களும் அவர்களின் வளாகத்தின் தூய்மையை உறுதிசெய்து அவர்களின் உரிம நிபந்தனைகளை கடைபிடிக்கும்படி கோலாலம்பூர் மாநகர் மன்றம் நினைவூட்டியுள்ளது.