
மூவார், ஆகஸ்ட்.26- ஜோகூரில் ஆறு ஆண்டுகளுக்கு முன் கைப்பேசி கடையொன்றில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் அக்கடையின் முன்னாள் ஊழியர் ஒருவருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 12 பிரம்படி விதிக்கப்பட்டுள்ளது. 32 வயதான Lim Yew Lungங்கிற்கு எதிரான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி மூவார் உயர் நீதிமன்ற நீதிபதி அத்தீர்ப்பை வழங்கினார்.
Lim கைது செய்யப்பட்ட தினமான 2020, ஜனவரி 29 ஆம் தேதியிலிருந்து கணக்கிட்டு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 12 பிரம்படியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மேல்முறையீடு செய்யும் காலக்கெடு முடிந்த பின், அவ்வழக்கு தொடர்பான அனைத்து ஆதாரப் பொருட்களையும் அகற்றுவதற்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
2020 ஜனவரி 29 ஆம் தேதி அதிகாலை தாமான் பெர்வீரா, ஜாலான் பெர்வீரா 1-ல் உள்ள கைப்பேசி உபகரணக் கடையில் 43 வயதான Tsun Chin Kiang என்பவரை உலோகப் பொருளைக் கொண்டு கொலை செய்ததாக Lim மீது முன்னதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
அவ்விருவருக்கும் சண்டை மூண்ட போது Lim தாக்கியதில், Tsunனுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டு அவர் ஜோகூர் பாருவில் உள்ள சுல்தானா அமினா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் நான்கு நாட்களுக்குப் பிறகு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.



