செண்டாயானில் குழந்தையை தாக்கிய சம்பவம்: குற்றத்தை மறுத்த பராமரிப்பாளர்

சிரம்பான், ஜூலை 20 – சிரம்பான் செண்டாயானில் தனது பராமரிப்பில் இருந்த 4 வயது குழந்தையை தாக்கி காயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட 60 வயதான குழந்தை பராமரிப்பாளர், இன்று நீதிமன்றத்தில் குற்றத்தை மறுத்துள்ளார்.
கடந்த மே 14 ஆம் தேதி, குழந்தையை தாக்கி உடலில் காயம் ஏற்படுத்தியதாக அவர் மீது குழந்தைகள் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20,000 ரிங்கிட் வரை அபராதம், 20 ஆண்டுகள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
நீதிமன்றம் அவருக்கு 15,000 ரிங்கிட் ஜாமீன் விதித்தது. மேலும், மாதம் ஒருமுறை காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட குழந்தை மற்றும் வழக்கின் சாட்சிகளைத் தொடர்புகொள்ளக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு ஆகஸ்ட் 21 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
கடந்த மே 22 ஆம் தேதி, ஒரு குழந்தையை வீட்டின் பின்புறத்தில் விட்டுவிட்டு பெண் பராமரிப்பாளர் தாக்குவதாகக் கூறப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



