
ஜோகூர் பாரு, ஆகஸ்ட்.03-ஜோகூர் Senai மேம்பாலத்தில் வாகனத்தின் முன் பகுதி விளக்கு வெளிச்சம் (High beam) தொடர்பான தகராறு இறுதியில் இருவர் கைதாகும் சூழ்நிலையை ஏற்படுத்தியது.
நேற்று காலை 8.04 மணிக்குக் கிடைத்த புகாரின் அடிப்படையில், மாலை 7:10 மணியளவில் Gelang Patah பகுதியில் உள்ள Forest Cityயில் 26 மற்றும் 30 வயதுடைய அந்த இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக கூலாய் மாவட்டக் காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் Tan Seng Lee தெரிவித்தார்.
சம்பவத்தின் போது சந்தேக நபர்கள் மற்றும் மேலும் இருவர் என நால்வர் பயணித்த கார் வேகத்தைக் குறைத்து திடீரென வலதுபுறப் பாதைக்கு மாறியதால் மற்றொரு வாகனத்தில் இருந்த ஆடவர் தமது காரின் முன் பகுதி விளக்குகளில் வெளிச்சத்தைக் கூட்டி பலமுறை ஒளிர விட்டுள்ளார்.
அதனால் ஆத்திரமடைந்த சந்தேக நபர்கள் அவரது வாகனத்தை வழி மறித்து நிறுத்தினர். அவர்களில் ஒருவர் பாராங் கத்தியை ஏந்தி மிரட்டியதுடன், வாகனத்தின் முன்பகுதியை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
சந்தேக நபர்களிடம் இருந்து கார் சாவிகள், கைபேசிகள், ஒரு வெள்ளை டி-ஷர்ட், கருப்பு ஜீன்ஸ், ஒரு கருப்பு தொப்பி, கருப்பு கைப்பிடியுடன் கூடிய 30 cm நீளமுள்ள பாராங் கத்தி மற்றும் சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கருப்பு உறை ஆகியவற்றைக் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இரு சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் அவர்கள் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என்பது தெரிய வந்தது.
மேலும் இரு நபர்கள் தேடப்பட்டு வரும் நிலையில், விசாரணை நடத்தப்படுகிறது.



