
புத்ராஜெயா, ஆகஸ்ட்-30,நேப்பாளத்தில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து, இன்னும் தொடர்பு கொள்ள முடியாத மலேசியர்களின் குடும்பத்தினருக்காக இன்று ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 30 சிறப்பு விளக்கக் கூட்டம் நடைபெறவுள்ளது.
வெளியுறவு அமைச்சு, தேசியப் பாதுகாப்பு மன்றம் மற்றும் இதர தொடர்புடைய நிறுவனங்கள் இணைந்து இந்தக் கூட்டத்தை நடத்தும் என வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ மொஹமட் ஹசான் தெரிவித்தார்.
மீட்புப் பணிகள் குறித்த நிலவரங்கள் இதில் குடும்பத்தினருக்கு விளக்கப்படும்.
தேவையேற்பட்டால் குடும்பத்தினரை நேப்பாளத்திற்கு அழைத்துச் செல்ல விஸ்மா புத்ரா தயாராக இருப்பதாகவும், இருப்பினும் பாலங்கள் சேதமடைந்திருப்பதால் பேரிடர் பகுதிக்குச் செல்வது தற்போதும் சவாலாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நேற்றிரவு நிலவரப்படி, நேப்பாளத்தில் 55 மலேசியர்களையும் சீனாவில் 36 பேரையும் இன்னும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
சீனா மற்றும் நேப்பாள அதிகாரிகளுடன் இணைந்து தொடர்ந்து தகவல்கள் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும், காட்மண்டுவில் உள்ள மலேசியத் தூதரகத்திற்கு கூடுதல் அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



