
குவாலா சிலாங்கூர்,செப்டம்பர் 9 – சிலாங்கூர், புஞ்சாக் ஆலாம் தொழிற்பேட்டையில் இயங்கி வந்த மிகப்பெரிய போதைப்பொருள் தயாரிப்பு ஆய்வகத்தை போலீசார் முறியடித்துள்ளனர். ஆகஸ்ட் 15ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 2.4 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்ற மிகப்பெரிய பறிமுதல்களில் ஒன்றாகும்.
‘Op Eumenes’ நடவடிக்கையில் சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் ஆறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, 29 முதல் 43 வயதுடைய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் மூன்று மலேசிய ஆண்கள், ஒரு வெளிநாட்டு ஆண் மற்றும் ஒரு வெளிநாட்டுப் பெண் அடங்குவர். அவர்கள்மீது ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்டவற்றில் 7,097 கிலோவுக்கும் அதிகமான திரவ வகை போதைப்பொருளும், 6,069 கிலோவுக்கும் அதிகமான தூள் வகை போதைப்பொருளும் உள்ளடங்கும். இதுதவிர கஞ்சா, எரிமின்-5, கெட்டமைன், யாபா மற்றும் மெத்தாம்பெட்டமைன் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தக் கும்பல் கடந்த பிப்ரவரி முதல் செயல்பட்டு, போதைப்பொருட்களை தயாரித்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளுக்கு விநியோகித்து வந்ததாக போலீசார் நம்புகின்றனர்.
கும்பலின் தலைவன் என நம்பப்படும் ஒருவன் சிரம்பானில் நடந்த போலீஸ் நடவடிக்கையில் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், தைவான் நாட்டைச் சேர்ந்த கைது செய்யப்பட்ட ஒருவன் போதைப்பொருள் தயாரிப்பில் நிபுணராக செயல்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மேலும் சில சந்தேக நபர்கள் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களின் வெளிநாட்டு தொடர்புகள் மற்றும் இந்தக் குற்றச்செயலில் உள்உதவி இருந்ததா என்பதையும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.



