
கோலாலம்பூர், செப்டம்பர்-3,தாய்லாந்தின் பேங்காக்கில் நடைபெற்ற அனைத்துலக திருநங்கை அழகிப் போட்டியில் மலேசியர் ஒருவர் பங்கேற்ற சம்பவத்திற்கு, சமய விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் Dr சுல்கிஃப்ளி ஹசான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இத்தகைய நிகழ்ச்சிகளில் பங்கேற்பது நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
அழகிப் போட்டியில் மலேசியர் ஒருவர் வெற்றி பெற்றதாகச் சமூக வலைத் தளங்களில் வீடியோ பரவியதைத் தொடர்ந்து அமைச்சர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இத்தகைய திருநங்கை அழகிப் போட்டிகளில் பங்கேற்பதற்கு மலேசிய அரசாங்கமோ அல்லது சமய நிர்வாக அமைப்புகளோ ஒருபோதும் அனுமதியோ, ஆதரவோ வழங்கியதில்லை என்றார் அவர்.
மாற்றுப் பாலினத்தைப் போல வேடமிடுவதும், திருநங்கை வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதும் இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கும், மலேசியக் கலாச்சார பண்பாட்டுக் கூறுகளுக்கும் முற்றிலும் எதிரானது எனக் கூறிய அவர், சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கச் சமய அதிகாரிகள் பிற நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவார்கள் எனத் தெரிவித்தார்.
மேலும், சட்டத்திற்குப் புறம்பான இத்தகைய விவகாரங்களைச் சமூக வலைத் தளங்களில் மிகைப்படுத்திப் பரப்புவதைத் தவிர்க்குமாறும் பொது மக்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
முன்னதாக, மலேசியாவைப் பிரதிநிதித்து அந்தத் திருநங்கை அழகிப் போட்டியில் ஆடவர் ஒருவர் பங்கேற்றதாகச் சமூக வலைத் தளங்களில் வீடியோ பரவி, வலைத்தளவாசிகளிடையே பல்வேறு விவாதங்களையும் எதிர்வினைகளையும் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.



