
மலாக்கா, ஜூன் 17 – இன்று காலை மலாக்காவில் ஹோட்டலின் ஏழாவது மாடியில் பராமரிப்பில் இருந்த லிப்ட் எனப்படும் மின்தூக்கி ஒன்று கீழே விழுந்ததில், இந்திய பிரஜைகளான இரண்டு தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
மின்தூக்கி கீழே விழுந்தபோது, விபத்தில் சிக்கிய இருவரும் அதன் இயங்கும் பகுதிக்குள் விழுந்ததாக மலாக்கா தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் இயக்குநர் முகமட் ஜைடி மாட் ( Mohd Zaidi Ma’at ) தெரிவித்தார்.
அதன்பின், தீயணைப்புப் படையினர் மீட்புப் பணியை மேற்கொண்டு, சுமார் ஒரு மணி நேரத்தில் சிக்கியிருந்த இருவரையும் மீட்டனர்.
27 வயதுடைய அந்த இரண்டு தொழிலாளர்களும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு, சுகாதார அமைச்சின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
சம்பவத்திற்கான காரணம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் காயங்களின் விவரங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றன.



