
ஷா ஆலாம், ஜூன்-12-சிலாங்கூர் ஷா ஆலாம் அருகே கூட்டரசு நெடுஞ்சாலையின் மோட்டார் சைக்கிள் பாதையில் நேற்று காலை நிகழ்ந்த ஒரு சாலை வன்முறைச் சம்பவத்தில், 45 வயது மதிக்கத்தக்க மோட்டார் சைக்கிளோட்டி வெட்டுக் கத்தியால் வெட்டப்பட்டுக் காயமடைந்தார்.
செக்ஷன் 13க்கு அருகே காலை 7 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தின்போது, சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரை கத்தியால் மிரட்டும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
பாதை மறிக்கப்பட்டிருந்ததால் பாதிக்கப்பட்ட நபர் ஹார்ன் அடித்ததே சந்தேக நபரின் இந்த ஆத்திரத்திற்குக் காரணம் என்று ஷா ஆலம் மாவட்ட போலீஸ் கூறியது.
கோபமடைந்த அந்த 43 வயது சந்தேக நபர், தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பாதிக்கப்பட்டவரை கத்தியால் வெட்டியுள்ளார்.
காயமடைந்தவர் சிகிச்சைக்காக ஷா ஆலாம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்; தற்போது அவரது நிலைமை சீராக உள்ளது.
சந்தேக நபரை உடனடியாகக் கைதுச் செய்த போலீஸ், ஆபத்தான ஆயுதங்களைப் பயன்படுத்தி காயப்படுத்துதல் தொடர்பான குற்றவியல் சட்டத்தின் பிரிவு 324-ன் கீழ் விசாரணையைத் தொடங்கியுள்ளது.



