கோலாலம்பூர், நவம்பர் 21 – நாளை நவம்பர் 22-ஆம் தேதி, புதன்கிழமை திட்டமிடப்பட்டதை போல, கோல்ட்ப்ளே (Coldplay) இசைநிகழ்ச்சியை நடத்துவதில், பாலஸ்தீன ஆதரவு குழுக்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.
மாறாக, பாலஸ்தீனத்தை ஆதரிப்பவர்களில், பிரிட்டிஷ் இசைக்குழுவான கோல்ட்ப்ளேயும் இடம் பெற்றுள்ளதை பிரதமர் சுட்டிக் காட்டினார்.
எனினும், அவ்விவகாரம் தொடர்பில், தாம் கூட்டரசு பிரதேச முப்தியுடன் விவாதிக்கப்போவதாக அன்வார் சொன்னார்.
கோல்ட்ப்ளே, பாலஸ்தீனத்தின் வெளிப்படையான ஆதரவாளராக இருந்து வருகிறது. 2011-ஆம் ஆண்டு, தனது அதிகாரப்பூர்வ முகநூல் சமூக ஊடகத்தில், “பாலஸ்தீனத்திற்கான சுதந்திரம்” என்ற பாடலை அந்த இசைக்குழு வெளியிட்டுள்ளது.
எனவே, கோல்ட்ப்ளே இசைக்குழு தொடர்பில், பாலஸ்தீன சார்பு குழுக்கள் சில உள்துறை அமைச்சிடம் கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளன. அதனால், அவ்விவகாரம் தொடர்பில், நடப்பு நிலவரம் குறித்து விவாதிக்க முஸ்தியுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என அன்வார் குறிப்பிட்டார்.
காஸாவில் நெருக்கடி நீடிக்கும் வேளையில் கோல்ட்ப்ளே போன்ற இசைநிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டுமா என மக்களவையில் மாஞ்சாங் பெரிகாத்தான் நேஷனல் உறுப்பினர் வான் அஹ்மாட் பைசால் வான் அஹ்மாட் கமால் முன் வைத்த கேள்விக்கும் அன்வார் இவ்வாறு பதிலளித்தார்.