
கிள்ளான், ஆகஸ்ட்-20-நாடு மற்றும் நாட்டு மக்கள் நலன் சார்ந்த சில முக்கிய அறிவிப்புகள், வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி தேசிய தினத்தின் முன்னிரவிலும், செப்டம்பர் 16-ஆம் தேதி மலேசிய தினக் கொண்டாட்டத்தின் போதும் வெளியிடப்படும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
கிள்ளானில் நடைபெற்ற இளைஞர் மாநாட்டு கலந்துரையாடல் நிகழ்வில் பேசிய அவர், தொடர்ந்து அக்டோபர் தொடக்கத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள 2027-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திலும் முக்கிய அம்சங்கள் இடம்பெறும் என்றார்.
அதே வேளையில், கிக் பொருளாதாரத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய மலேசிய கிக் பொருளாதார ஆணையம் அமைக்கப்பட்டு வருவதாகவும், அவர்களுக்கான புதிய சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
மேலும், பட்டதாரி இளைஞர்கள் தொழில் தொடங்குவதை எளிதாக்கும் வகையில், முந்தைய வணிகப் பதிவுகள் ஏதுமின்றி தெக்குன் (TEKUN) போன்ற அமைப்புகள் மூலம் நிதி உதவி பெறுவதற்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டு வருவதாகவும் அன்வார் தெரிவித்தார்.
ஆக, வரும் மாதங்களில் பல்வேறு நற்செய்திகள் காத்திருப்பதாக, மலேசியர்களிடையே எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.



