
கோலாலம்பூர், ஜூன்-9-3 வயது சிறுவன் ஒருவன், தனது தாயாரின் கடப்பிதழில் பேனாவால் டைனோசர் படம் வரைந்து விளையாடியதால், அம்மாது தனது வெளிநாட்டுப் பயணத்தை இரத்துச் செய்து, விமானத்தை மாற்றி அமைத்த வினோதச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த சனிக்கிழமை, பாதிக்கப்பட்ட அந்தப் பெண் தனது வேலைத் தொடர்பான பயணத்திற்காகப் பெட்டிகளை அடுக்கிக் கொண்டிருந்தபோது, அவரது 3 வயது மகன் யாருக்கும் தெரியாமல் கடப்பிதழை எடுத்து நீல நிறப் பேனாவால் பக்கங்கள் முழுவதும் கிறுக்கியுள்ளான்.
இரவு விமானம் ஏறவிருந்த நிலையில், கடப்பிதழைச் சரிபார்க்க அவர் புத்ராஜெயா குடிநுழைவுத் இலாகாவுக்கு விரைந்தார்.
ஆனால், அதிகாரிகள் அந்தக் கடப்பிதழ் சேதமடைந்துவிட்டதாகக் கூறி, அதனைப் பயன்படுத்த முடியாது என மறுத்துவிட்டனர்.
வார இறுதி என்பதால் புதியக் கடப்பிதழைப் பெற திங்கட்கிழமை வரை அவர் காத்திருக்க வேண்டியதாயிற்று.
இதன் காரணமாக, தனது விமானப் பயணத்தை திங்கட்கிழமை இரவுக்கு மாற்றியமைக்க அவருக்கு கூடுதலாக 620 ரிங்கிட் செலவானது.
இந்தச் சம்பவத்தால் தனக்கு வருத்தமிருந்தாலும், தன் மகன் இன்னும் சில நாட்கள் தன்னுடன் இருக்கவே இவ்வாறு செய்திருப்பான் என அந்தத் தாய் சிரித்துக் கொண்டே சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார்.



