![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/12/MixCollage-07-Dec-2023-01-02-PM-9773.jpg)
கோலாலம்பூர், டிசம்பர் 7 – நாட்டில் மீண்டும் கோவிட்-19 தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதனை சமாளிக்க, போதுமான தடுப்பூசி கையிருப்பு இருப்பதாக, சுகாதார துணையமைச்சர் டத்தோ லுகனிஸ்மான் அவாங் செளனி கூறியுள்ளார்.
நாடு முழுவதும் உள்ள, அனைத்து 231 பொது சுகாதார மையங்களிலும், கோவிட்-19 தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது. அதில் கூடுதல் ஊக்க கோவிட்-19 தடுப்பூசிகளும் அடங்குமென, லுகனிஸ்மான் தெரிவித்தார்.
இந்நிலையில், கடந்த செம்டம்பரில் இருந்து, நாள் ஒன்றுக்கு சராசரியாக இரண்டு ஊக்க கோவிட்-19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருவதையும், துணையமைச்சர் சுட்டிக் காட்டினார்.
முன்னதாக, கடந்த மாதம் முதல் நாட்டில் கோவிட்-19 தொற்று சம்பவங்கள் மீண்டும் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, நவம்பர் 19-ஆம் தேதியிலிருந்து 25-ஆம் தேதி வரையில், மிக அதிகமாக மூவாயிரத்து 626 கோவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகின.
எனினும், அத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், மிதமான அறிகுறிகளையே கொண்டிருப்பதாக, சுகாதார தலைமை செயலாளர் டத்தோ டாக்டர் முஹமட் ரட்சி அபு ஹசான் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.