
பெய்ஜிங், ஏப் 15 – சீனாவில் குவாங்டாங் மாநிலத்திலுள்ள ஷாந்தௌ
(Shantou ) நகரிலுள்ள ஓர் உயரமான அடுக்குமாடிக் கட்டிடத்தின் குடியிருப்பில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை ஒரு பெண் பெருமளவு ஹங்காங் HK$1,000 டாலர் நோட்டுகளை கீழே வீசியதால் அங்கிருந்தவர்கள் அந்தப் பணத்தை எடுக்க முண்டியடித்தனர்.
பின்னர் அதிகாரிகள் தலையிட்டு பணத்தை மீட்டனர் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் லாங்ஹு ( Longhu ) மாவட்டத்தின் சிங்ஹு (Xinghu ) நகரில் காலை மணி 10 அளவில் நடந்தது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளிகள் மற்றும் புகைப்படங்களில், அந்தப் பெண் தனது பால்கனியிலிருந்து ஊதா நிற பணக்கட்டுகளை மீண்டும் மீண்டும் வீசுவது தெரிகிறது.
சில இணையப் பதிவுகள், அதன் மதிப்பு HK$2 மில்லியன் ஹங்காங் டாலராக இருக்கலாம் என்று தெரிவித்தன.
கண்டெடுக்கப்பட்ட நோட்டுகளை சில குடியிருப்பாளர்கள் ஒப்படைத்ததோடு, அவை உண்மையானவை எனச் சரிபார்க்கப்பட்டதாக சொத்து நிர்வாக பணியாளர்கள் உறுதிப்படுத்தினர்.
பின்னர் இந்த விவகாரத்தை உள்ளூர் போலீஸ் நிலையம் கையாண்டது. அதோடு மீட்கப்பட்ட பணத்தை ஒப்படைக்குமாறு குடியிருப்பாளர்களுக்கு வலியுறுத்தப்பட்டது.
இதனிடையே குடும்ப உறுப்பினர் ஒருவரின் கடுமையான உடல்நலக்குறைவால் அந்தப் பெண் மன உளைச்சலில் இருந்ததாக மாலையில் Zhuchi மாவட்ட அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
அவருக்கு ஆறுதல் கூறிய பிறகு, அவரது நிலை சீரானது. பணியாளர்களும் குடியிருப்பாளர்களும் சிதறிய பணத்தைச் சேகரித்துத் திருப்பிக் கொடுத்தனர்.
சம்பந்தப்பட்ட மொத்தத் தொகை குறித்து அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
கடந்த மாதம் சோங்கிங்கில்(Chongqing) கில் இதேபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
அங்கு இரண்டு மோசடி சந்தேக நபர்கள், ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் ஜன்னலிலிருந்து பணத்தை வீசியபோதிலும் அனைத்துப் பணமும் மீட்கப்பட்டது.



