![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/MixCollage-28-May-2024-09-21-AM-9480.jpg)
கோலாலம்பூர், மே 28 – தலைநகர், செராஸ், அலாம் டாமாயிலுள்ள, அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றுக்கு அருகில், பேருந்து ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐந்து வாகனங்கள் சேதமடைந்தன.
அச்சம்பவம், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மணி 11 வாக்கில் நிகழ்ந்தது.
இரு புரோடுவா மைவி கார்கள், புரோடுவா வீவா கார் ஒன்று, தோயோதா வியோஸ் கார் ஒன்று உட்பட ஹோண்டா HRV வாகனமும் அவ்விபத்தில் சேதமடைந்ததாக, கோலாலம்பூர் போக்குவரத்து குற்றப்புலனாய்வுத் துறை துணைத் தலைவர் சுப்ரிடெண்டன் சூபியான் அப்துல்லா தெரிவித்தார்.
33 வயது நபர் செலுத்திய பேருந்து, பினாங்கிலிருந்து, அலாம் டமாயிலுள்ள, தங்கும் விடுதி ஒன்றுக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற போது அவ்விபத்து நிகழ்ந்தது.
சம்பவத்தின் போது, அப்பேருந்தில் இருந்த 31 பயணிகளில் யாரும் காயமடையவில்லை.
எனினும், அவ்விபத்தால், சம்பவ இடத்தில் இருந்த மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. அதனால், அது குறித்து TNB நிறுவனத்துக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது, சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுனர், மது அல்லது போதைப் பொருள் எதுவும் உட்கொள்ளவில்லை என்பது சிறுநீர் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.