
தஞ்சோங் மலிம், ஜூன் 17 – மாணவர்களிடம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆர்வத்தை வளர்க்கும் நோக்கில், லாடாங் கத்தோயாங் தமிழ்ப்பள்ளி (SJKT Ldg Katoyang) மாணவர்களுக்கான ட்ரோன் கல்வித் திட்டம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் (MOSTI) மற்றும் தஞ்சோங் மாலிம் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ சாங் லிஹ் காங் (Chang Lih Kang) தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.
மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் உட்பட சுமார் 300 பேர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியின்போது ட்ரோன், மற்றும் STREAM கல்வி தொடர்பான கண்காட்சிகள் நடைபெற்றன. அதேவேளை, பள்ளியில் புதிய STEM, STREAM மற்றும் ட்ரோன் கற்றல் அறையும் திறந்து வைக்கப்பட்டது.
மேலும், பள்ளி நிர்வாகக் குழுவுக்கும் மலேசிய ட்ரோன் வர்த்தக மற்றும் தொழில்துறை பேரவைக்கும் (MDCoCi) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடப்பட்டது.
இது மலேசியாவில் செயல்படுத்தப்படும் முதல் ட்ரோன் கல்வி முன்னோடித் திட்டம் என டத்தோ சாங் லிஹ் காங் குறிப்பிட்டார்.
ட்ரோன் தொழில்நுட்பம் வேளாண்மை, போக்குவரத்து, தொழில், பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் துறைகளில் வேகமாக வளர்ந்து வருவதால், மாணவர்கள் இளம் வயதிலேயே இந்தத் துறையை அறிந்துகொள்வது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த HiiLSE Drone, ASOK UAS, KTDMB, GVPL, IEEE, JLX STEAM AI Coding, EWRF தஞ்சோங் மாலிம், EWRF மலேசியா மற்றும் Fiesta Media உள்ளிட்ட பல அமைப்புகள் தொழில்நுட்பம், ஆராய்ச்சி, செயற்கை நுண்ணறிவு மற்றும் சமூக ஆதரவை வழங்கியுள்ளன.
இந்த முயற்சி, மாணவர்களை எதிர்கால தொழில்நுட்ப உலகுக்குத் தயார்படுத்துவதோடு, புதுமைச் சிந்தனை மற்றும் திறன்களை வளர்க்கும் முக்கிய தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



