
மலேசிய இந்தியர்களுக்கான செய்திகளையும், நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளையும் துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்த்து வரும் முன்னணி தமிழ் ஊடக நிறுவனங்களில் ஒன்றாக வணக்கம் மலேசியா செயல்பட்டு வருகிறது.
செய்திகளை வழங்குவதோடு மட்டும் நின்றுவிடாமல், சமூகத்திற்கு பயனளிக்கும் முயற்சிகளிலும் தனது பங்களிப்பை வழங்க வேண்டும் என்ற சமூகக் கடப்பாட்டின் அடிப்படையில், வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்த சரியான புரிதலை இளம் தலைமுறையினரிடம் ஏற்படுத்தும் புதிய முயற்சியை வணக்கம் மலேசியா முன்னெடுத்துள்ளது.
அதன் முதல் கட்டமாக, கிள்ளானில் உள்ள பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளிக்கு அண்மையில் வணக்கம் மலேசியா குழுவினர் வருகை புரிந்து மாணவர்களுடன் நேரடியாக கலந்துரையாடினர்.
AI தொழில்நுட்பத்தின் சாதக, பாதகங்கள், அதனை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டியதன் அவசியம் மற்றும் கல்வி, அன்றாட வாழ்க்கையில் AI-ஐ பயனுள்ள வகையில் பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு எளிமையான முறையில் விளக்கமளிக்கப்பட்டது. கலந்துரையாடல்கள் மற்றும் சுவாரஸ்யமான செயல்பாடுகள் வழியாக மாணவர்களும் இதில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
வணக்கம் மலேசியாவின் நிர்வாக இயக்குநர் தியாகராஜன் முத்துசாமி, செய்திப் பிரிவுத் தலைவர் வேதகுமாரி வெங்கடேசன் மற்றும் வணிகப் பிரிவுத் தலைவர் ஜெகனாதன் கிருஷ்ணசாமி ஆகியோர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைச் சந்தித்து தங்களது அனுபவங்களைப் பகிர்ந்ததுடன், AI குறித்த மாணவர்களின் புரிதல்களையும் கேட்டறிந்தனர்.
இந்த முயற்சியில், உணவுத் தயாரிப்புத் துறையில் 35 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் Munchy’s நிறுவனமும் வணக்கம் மலேசியாவுடன் கைகோர்த்தது. அந்நிறுவனத்தின் பிரதிநிதிகளும் மாணவர்களுடன் கலந்துரையாடி தகவல்களைப் பகிர்ந்ததுடன், மாணவர்களுக்கு Munchy’s பிஸ்கட்டுகளையும் வழங்கி மகிழ்வித்தனர்.
தொழில்நுட்பம் வேகமாக மாறிவரும் இந்த காலத்தில், AI-ஐ பயன்படுத்துவது மட்டுமின்றி, அதை சரியான முறையிலும் பொறுப்புடனும் பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும் என்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கம்.



