
தாப்பா, ஆக-24-பஹாங், கேமரன் மலையை நோக்கிச் செல்லும் ஜாலான் தாப்பா 21 ஆவது மைல் அருகே நேற்றிரவு SUV வாகனம் ஒன்று கவிழ்ந்து ஒரு பள்ளத்தில் விழுந்த சம்பவத்தில் அதன் ஓட்டுநர் உயிரிழந்தார்.
இந்த விபத்தில் SUV வாகனத்தில் இருந்த ஐந்து பயணிகள் காயம் அடைந்தனர்.
இவ்விபத்து குறித்து நேற்றிரவு மணி 8.43க்கு அழைப்பைப் பெற்றதாக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் பேரா நடவடிக்கை பிரிவின் உதவி இயக்குநர் சபரோட்சி நோர் அகமட் ( Sabarodzi Nor Ahmad)தெரிவித்தார்.
ஆறு பேருடன் சென்ற பெரோடுவா அருஸ் வாகனம், சுமார் மூன்று மீட்டர் ஆழமுள்ள ஒரு பள்ளத்தாக்கில் விழுவதற்கு முன்பு சறுக்கியதோடு தலைகீழாக ஆழமற்ற ஒர் ஆற்றில் விழுந்தததாக இன்று காலையில் வெளியிட்ட அறிக்கையில் சபரோட்சி குறிப்பிட்டார்.
காயமடைந்தவர்களில் ஒரு பெண், பதின்ம வயதுடைய இரண்டு சிறுமிகள் மற்றும் இரண்டு குழந்தைகளும் அடங்குவர்.
தங்களது குடும்ப உறுப்பிர்களில் ஒருவர் கேமரன் மலையில் இறந்ததைத் தொடர்ந்து அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக அவர்கள் அனைவரும் கோலாலம்பூரிலிருந்து கேமரன் மலை புறப்பபட்டதாக கூறப்பட்டது.



