
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்-17-மலாயாப் பல்கலைக்கழகமான UM, அதன் மருத்துவமனை PET-CT Scan பிரிவில் SOP நடைமுறைகள் மீறல்கள் காரணமாக பணியாளர்களுக்கு புற்றுநோய் ஏற்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
அனைத்து செயல்பாடுகளும் அணு ஆற்றல் உரிமச் சட்டம் மற்றும் கதிரியக்கப் பாதுகாப்பு SOP படியே நடைபெறுவதாக அது விளக்கியது.
பணியாளர்கள் dosimeter எனப்படும் கதிரிரியக்க அளவுமானி அணிந்து கதிரியக்க அளவை கண்காணிக்கின்றனர்; தவிர, கதிரியக்க அளவும் அதிகாரப்பூர்வ வரம்புக்கு மிகக் குறைவாக உள்ளதை UM உறுதிப்படுத்தியது.
சுகாதார அமைச்சின் மருத்துவ கதிரியக்க ஒழுங்குமுறைப் பிரிவு கடந்தாண்டு அக்டோபரில் ஆய்வு செய்தபோது, எந்தவித மீறலும் இல்லை என உறுதிச் செய்யப்பட்டதையும் அது சுட்டிக் காட்டியது.
கதிர்வீச்சுக் கழிவுகள் பாதுகாப்பாக நிர்வகிக்கப்படுகின்றன; என்றாலும் தேவைப்பட்டால் மேற்கொண்டு ஆய்வுக்கு உட்பட தாங்கள் தயாராக இருப்பதாக அது கூறிற்று.
முன்னதாக, ReformIPT என்ற சமூக ஆர்வலர் குழு, மலாயாப் பல்கலைக் கழக மருத்துவ மையத்தில் ஏற்பட்டதாகக் கூறப்படும் கதிர்வீச்சு பாதுகாப்பு மீறல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தது.
மருத்துவமனையின் அணு மருத்துவப் பிரிவில் நிறுவப்பட்ட PET-CT இயந்திரங்கள் சரியான முறையில் நிறுவப்படவில்லை என்றும், அதனால் பணியாளர்கள் அலட்சியத்தின் காரணமாக நாட்பட்ட நோய்களுக்கு ஆளாகியுள்ளதாக அக்குழு குற்றம்சாட்டிது.
இந்தத் தவற்றால், சில பணியாளர்கள் நுரையீரல், இரத்தம் மற்றும் மார்பகப் புற்றுநோய்களுக்கு ஆளாகியுள்ளதாகவும் அக்குழுக் கூறிக் கொண்டது…



