Latestமலேசியா

விவேக தொலைபேசியில் சிறார் ஆபாசப் படங்கள் ஹென்றி கெர்னி சீர்த்திருத்த பள்ளிக்கு மாணவன் அனுப்பப்பட்டான்

கூச்சிங், மே-13-தனது விவேக தொலைபேசியில் சிறார்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தும் உள்ளடக்கங்களை வைத்திருந்த குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, பாவ் நகரில் உள்ள ஒரு பள்ளியின் ஆறாம் படிவ மாணவரை, 21 வயது ஆகும் வரை கூச்சிங்கில் உள்ள ஹென்றி கெர்னி சீர்த்திருத்த பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று செசன்ஷ் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

2017 ஆம் ஆண்டின் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் பிரிவு 26(1)-இன் கீழ், அந்த சீர்த்திருத்த பள்ளியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள காலத்தில், அந்த மாணவன் எஸ்.டி.பி.எம் கல்வியை முடிப்பதையும் பள்ளி உறுதிப்படுத்த வேண்டும்.

அதோடு மறுவாழ்வு ஆலோசனை அமர்வுகளில் அந்த மாணவன் பங்கேற்க வேண்டும் என்றும் நீதிபதி முஸ்லி அப்துல் ஹிமிட் உத்தரவிட்டார்.

கூடுதலாக, குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலையான பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு பாவ் நகரில் போலீஸ் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.

குற்றவாளியின் சமூக நல அறிக்கையை நீதிமன்றம் கேட்டறிந்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

சிறார்களுக்கு எதிரான 2017ஆம் ஆண்டின் பாலியல் குற்றங்கள் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுக்களை ஏப்ரல் 10 ஆம் தேதியன்று அந்த மாணவன் ஒப்புக்கொண்டான்.

குழந்தைகள் ஆபாசப் படங்கள் தொடர்பான வணிகத்தில் ஈடுபட்டதாக அந்த மாணவன் மீது முதல் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.

தனது விவேக தொலைபேசியில் சிறார் பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கத்தை வைத்திருந்ததாகக் அந்த மாணவன் மீது இரண்டாவது குற்றச்சாட்டு கொண்டு கொண்டுவரப்பட்டது.

ஏப்ரல் 7 ஆம் தேதி இரவு மணி 9.10க்கு பாவ் நகரில் உள்ள ஒரு கிராமத்தில் அந்த மாணவன் இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!