
சென்னை, மே-13-தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஜோதிடர் நியமன விவகாரத்தில், தமிழக வெற்றிக் கழக அரசு அதிரடி முடிவை எடுத்துள்ளது.
முதலமைச்சர் விஜய்யின் அரசியல் ஆலோசகர் மற்றும் சிறப்புப் பணி அதிகாரியாக (OSD) ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிகோவெல் நியமிக்கப்பட்டது தொடர்பாக நேற்று உத்தரவு வெளியானது.
ஒரு ஜோதிடரை அரசுப் பதவியில் அமர்த்துவதா என சமூக வலைதளங்களிலும், அரசியல் களத்திலும் கடந்த 24 மணிநேரமாகக் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இன்றைய சட்டமன்றக் கூட்டத்தில் கூட எதிர்கட்சியினர் விஜய்யை ‘வறுத்தெடுத்தனர்.’
இந்நிலையில் மக்களின் உணர்வுகளுக்கும், எதிர்ப்புகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில், அந்த நியமன உத்தரவை இரத்துச் செய்வதாக முதலமைச்சர் விஜய் தற்போது அதிரடியாக அறிவித்துள்ளார்.
இதற்கான புதிய அரசாணையைத் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இன்று வெளியிட்டுள்ளார்.
பகுத்தறிவுப் பாதையில் பயணிக்க வேண்டிய அரசு நிர்வாகத்தில் இத்தகைய நியமனம் தேவையற்றது என்ற பொது மக்களின் கருத்துக்குப் பணிந்து, இந்த முடிவை தவெக அரசு எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
பதவியேற்ற சில நாட்களிலேயே விமர்சனங்களுக்குச் செவிசாய்த்து இந்த உத்தரவை வாபஸ் பெற்றது அரசியல் வட்டாரத்தில் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.



