![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/MixCollage-05-Mar-2024-09-31-AM-8819.jpg)
கோலாலம்பூர், மார்ச் 5 – சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், வீட்டுக் காவலில் வைக்கும் முயற்சியின் கீழ் வீட்டிலேயே சிறைத் தண்டனையை அனுபவிக்கத் தகுதியற்றவர் என்று உள்துறை அமைச்சர் சைபுடின் நசுட்டின் இஸ்மாயில் தெரிவித்திருக்கிறார். மூத்த குடிமக்கள், கர்ப்பிணி அல்லது ஊனமுற்ற கைதிகள் மற்றும் நான்கு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்கும் கைதிகள் மட்டுமே வீட்டுக் காவலுக்கு தகுதியுடையவர்கள் என்று சைபுடின் மீண்டும் வலியுறுத்தினார். நஜிப் அந்தப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்று அவர் கூறினார். சனிக்கிழமையன்று, புத்ராஜெயா நான்கு ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவான சிறைத்தண்டனையுடன் கைதிகளுக்கு வீட்டுக் காவலை நடைமுறைப்படுத்த கொள்கையளவில் ஒப்புக்கொண்டதாக சைபுடின் அறிவித்தார்.
சட்டத்தில் உள்ள பொருத்தமான விதிகளின் அடிப்படையில் இந்த முயற்சியை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து உள்துறை அமைச்சு ஆராய்ந்து வருவதாக அவர் கூறினார். இதனைத் தொடர்ந்து சீரமைப்பை வலியுறுத்தும் குழுவான Projek Sama , கைதிகளின் வீட்டுக் காவலுக்குத் தகுதியை நிர்ணயிக்கும் போது, வெளிப்படையான மற்றும் நிலையான செயல்முறையை உருவாக்க, இந்த விவகாரத்தில் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு புத்ராஜெயாவை வலியுறுத்தியது. சலுகை பெற்றவர்கள் அல்லது சக்திவாய்ந்தவர்கள்” என்று கருதப்படும் குற்றவாளிகளுக்கு பயனளிக்கும் வகையில் இந்த முயற்சி துஷ்பிரயோகம் செய்யப்படாது என்பதை இது உறுதி செய்யும் என்று அது கூறியது. நஜிப்பை வீட்டுக் காவலில் வைக்க அனுமதிப்பதற்கு எதிராக அரசாங்கத்தை அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. SRC International வழக்கில் நஜிப்பின் சிறைத்தண்டனையை 12 ஆண்டுகளில் இருந்து ஆறாகக் குறைப்பதாக கூட்டரசு பிரதேச மன்னிப்பு வாரியம் பிப்ரவரி 2 ஆம் தேதியன்று அறிவித்தது. மேலும் அவருக்கான அபராதமும் 210 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்டாக குறைக்கப்பட்டது.