
கோலாலம்பூர், ஜூன்-15 – நாட்டில் இனங்களுக்கிடையே பிளவை ஏற்படுத்த முயலும் பிரச்சாரங்களால் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
இத்தகைய நடவடிக்கைகள் தேசிய ஒற்றுமையை பாதிப்பதோடு, மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முயற்சிகளையும் திசைதிருப்பும் என்று அவர் கூறினார்.
மலாய், சீனர், இந்தியர் என மக்களைப் பிரித்து மோதவைக்கும் அரசியல் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம் என்றும் அதனால் பாதிக்கப்படுவது சாதாரண மக்கள்தான் என்றும் பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.
புக்கிட் கியாரா நீண்ட கால குடியிருப்பு மக்களுக்கான நிரந்தர வீட்டு திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய அவர், மனிதநேயம், இரக்கம் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகிய மதிப்புகளை சமூகத்தில் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
மேலும், மலேசியா ஒரு பல்லின நாடாக இருப்பதை அனைவரும் மதிக்க வேண்டும் என்றும், இன அடிப்படையிலான வெறுப்பு அரசியலை நிராகரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.



