![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/MixCollage-31-Mar-2024-09-25-AM-3100.jpg)
கோலாலம்பூர், மார்ச் 31 – புதன்கிழமை கோலாலம்பூரில் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகத்திற்குரிய இஸ்ரேலிய உளவாளி, மலேசியாவில் ஹமாஸ் செயல்பாட்டாளர்களைக் கொல்லும் பணியில் இருந்ததற்கான சாத்தியக்கூறுகளை போலீசார் நிராகரிக்கவில்லை.
அவனுக்கு, இஸ்ரேலிய உளவுத்துறை நிறுவனமான மொசாடுடன் தொடர்பு உள்ளதா எனவும் விசாரணை நடத்தி வருவதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் Tan Sri Razarudin Husain கூறினார்.
எந்த சாத்தியங்களையும் ஒதுக்காமல் எல்லா கோணங்களிலும் விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.
அந்த இஸ்ரேலிய உளவாளியிடம் 6 கைத்துப்பாக்கிகளும் 200 தோட்டாக்களும் இருந்ததற்கான காரணம் குறித்தே தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
குடும்பத் தகராறு காரணமாக மலேசியாவில் உள்ள சக நாட்டவரைக் கொல்ல வந்ததாக அவன் கூறிக் கொண்டாலும் அது நம்பும்படியாக இல்லை.
எனவே, தாம் ஏற்கனவே கூறியது போல, மாமன்னர், பிரதமர் அல்லது மற்ற முக்கியப் பிரமுகர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் அவன் நாட்டுக்குள் வந்திருக்கலாம் என்ற சாத்தியத்தை மறுப்பதற்கில்லை என IGP சொன்னார்.
இவ்வேளையில், அவ்வாடவனுக்கு 6 கைத்துப்பாக்கிகளை விநியோகம் செய்ததாக நம்பப்படும் கணவன் மனைவி குவாலா சிலாங்கூர் ரமலான் சந்தையில் வைத்து கைதுச் செய்யப்பட்டனர்.
அண்டை நாட்டில் இருந்து பெறப்பட்ட அவற்றை Cryptocurrency மூலமாக அந்த முக்கியச் சந்தேக நபனிடம் அவர்கள் விற்றிருப்பதாக அறியப்படுகிறது.
அவனிடம் விற்றது போக, அவர்கள் வீட்டில் மேலுமொரு கைத்துப்பாக்கிக் கைப்பற்றப்பட்டது குறித்தும் விசாரிக்கப்படுகிறது.
முறையே 42, 40 வயதான அக்கணவனும் மனைவியும் விசாரணைக்காக ஒரு வாரம் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.