ஈப்போ, டிச 17 – ஈப்போவில் நிகழ்ந்த விபத்தில் மாணவன் ஒருவன் மரணம் அடைந்தது தொடர்பில் விசாரணைக்காக கைது செய்ப்பட்ட மூத்த போலீஸ் அதிகாரி போதைப் பொருளை உட்கொள்ளவில்லையென தெரியவந்துள்ளது.
மேரு ராயாவில் வெள்ளிக்கிழமை மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் ஓட்டிச் சென்ற கார் மோதிய சம்பவத்தில் ஐந்தாம் படிவ மாணவன் மரணம் அடைந்தது தொடர்பில் இதுவரை 12 புகார்களை பெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை முதல் இந்த புகார் பெறப்பட்டதாகவும் சாலை பேக்குவரத்து சட்டத்தின் 41ஆவது உட்பிரிவு (1) விதியின் கீழ் இச்சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பேரா போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ முகமது யுஸ்ரி ஹாசன் தெரிவித்தார்.
அலட்சியமாக வாகனம் ஓட்டியதால் மரணம் ஏற்படுத்தியது மற்றும் கொலைக்கான குற்றவியல் சட்டத்தின் 302ஆவது விதியின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். அதோடு 44 வயதுடைய அந்த போலீஸ் அதிகாரியின் இரத்த மாதிரியும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
வெள்ளிக்கிழமை மதியம் 12. 40 மணியளவில் ஜாலான் தாமான் ஜாதியில் நிகழ்ந்த விபத்தில் 17 வயது மாணவன் முகமது ஜாஹ்ரிப் அஃபெண்டி இறந்தான். அவ்விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட போலிஸ் அதிகாரி நாளை டிசம்பர் 18ஆம் தேதி வரை தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.