புது டெல்லி, பிப் 4 – கணவர் ஒருவர் தனது 3வது மனைவியை வீட்டிற்குள் 12 ஆண்டுகளாகப் பூட்டி வைத்த சம்பவம் புது டில்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அந்த நபரோடு திருமணம் ஆனதில் இருந்து, தனது வீட்டினுள் அடைக்கப்பட்டதாக போலிசாரால் மீட்கப்பட்ட 30 வயதுக்குட்பட்ட அந்த இளம் பெண் கூறியுள்ளார்.
அந்த பெண் அளித்த பகீர் வாக்கு மூலத்தில், அந்த கணவர் வேலைக்குச் செல்லுமுன் தன்னை அந்த அறையில் வைத்து பூட்டுவார் என்றும், அந்த அறையில் கழிப்பறை வசதி இல்லாததால் ஒரு அட்டை பெட்டியை தான் பயன்படுத்திக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
‘குழந்தைகள் பள்ளி முடிந்து வீடு திரும்பினாலும், என் கணவர் வீட்டிற்கு வரும் வரை வெளியே தான் காத்திருப்பார்கள். நான் சன்னல் வழியாகத் தான் உணவு கொடுப்பேன்’ என்றும் இரு குழந்தைகளுக்குத் தாயான அந்த பெண் கூறியுள்ளார்.
தனது மனைவி குறித்து ஒருவித சந்தேகம் கலந்த பயத்துடன் இருந்த வந்த அந்த ஆடவர், அவரது மனைவியை சில வாரங்களாக அவ்வாறு அடைத்து வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதனிடையே, அந்த பெண் கணவர் மீது புகார் அளிக்க விரும்பவில்லை என்றும், மாறாக தன்னை தனது பெற்றோர் வீட்டில் விட்டு விட்டால் போதும் என்றும் கூறியுள்ளார்.
ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்து, அந்த இரு பெண்களையும் அந்த நபர் விவாகரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்திற்கு பின் இருவருக்கும் மனநல ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் போலிசார் தெரிவித்துள்ளனர்.