
கோலாலம்பூர், மே 28 – சபா, கோத்தா கினபாலுவில் 13 வயது மாணவி ஒருவர் மற்ற ஐந்து மாணவிகளால் தாக்கப்பட்டதில் காயமடைந்தார்.
இந்தத் தாக்குதல் குறித்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
மே 22ஆம் தேதி காலை மணி 8க்கு நடந்த இந்தச் சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்ட மாணவி மே 23ஆம்தேதியன்று காலை மணி 7.51 க்கு புகார் செய்ததாக , கோத்தா கினபாலு போலீஸ் தலைவர் சைட் லோட் சைட் அப்துல் ரஹ்மான் ( Syed Lot Syed Abdul Rahman) தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மாணவியும் சந்தேக நபர்களும் கோத்தா கினபாலுவைச் சுற்றியுள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் என்பதோடு , அவர்கள் ஒரு வாட்ஸ்அப் குழு மூலம் அறிமுகமானவர்கள் .
வாட்ஸ்அப் குழுவில் ஏற்பட்ட தவறான புரிந்துணர்வினால் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மாணவியை சந்தேக நபர்களில் இருவர் சம்பவ இடத்திற்கு அழைத்து வந்ததாகவும், பின்னர் மீதமுள்ள பெண்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு தாக்கியதாக விசாரணையில் தெரியவந்தது.
இந்தச் சம்பவம் குறித்து தனது உறவினர்களுக்கோ அல்லது போலீசிற்கோ தெரிவிக்கக் கூடாது என்று மிரட்டப்பட்டதாக பாதிக்கப்பட்ட மாணவி கூறியுள்ளார்.
இந்தத் தாக்குதலை பல மாணவர்களும் பொதுமக்களும் நேரில் கண்டு, பதிவுசெய்து, இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.



