ஷா ஆலாம், மார்ச் 29 – சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் உட்பட யாருக்கும் சிறப்பு சலுகை அளிக்கப்படவில்லை.
அனைத்து கைதிகளும், சிறைச்சாலை விதிகள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட SOP நடைமுறைகளுக்கு ஏற்பவே நிர்வகிக்கப்படுவதாக, மலேசிய சிறைச்சாலை துறையின் தலைமை இயக்குனர் டத்தோ நோர்டின் முஹமட் தெரிவித்தார்.
தண்டனை பெறும் எவரும், அமலில் இருக்கும் சட்ட திட்டங்களின் படி, சமமாக நடத்தப்படுவார்கள் எனவும் நோர்டின் சொன்னார்.
அது தற்சமயம் காஜாங் சிறையில் தண்டனையை அனுபவித்து வரும் நஜிப்பிற்கும் பொருந்தும் என்றாரவர்.
அவருக்கு சிறைச் சாலை அதிகாரிகள் சிறப்பு சலுகை வழங்குவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நோர்டின் தெரிவித்தார்.
முன்னதாக, நேற்று விடுதலையான சுயேட்சை போதகரான வான் ஜி வான் ஹுசைன், சிறையில் நஜிப்பிற்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக கூறியிருந்தார்.
நஜிப் கைதிகளுக்கான பிரத்தியேக ஆடையை அணியவில்லை எனவும், தன்னைப் போலல்லாமல் “சிறப்பு தடுப்பு” பகுதியில் வைக்கப்பட்டிருப்பதாலவும் வான் ஜி தெரிவித்துள்ளார்.
2014-ஆம் ஆண்டு, சிலாங்கூர் சுல்தானுக்கு எதிராக அவதூறான கூற்றை வெளியிட்டதற்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட வான் ஜி, சில மாதங்களுக்கு பின்னர் இம்மாதம் 22-ஆம் தேதி விடுதலை ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.