
ஷா ஆலாம், ஆகஸ்ட்.04-போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட மலேசிய விமானி, ஜகார்த்தாவுக்குப் புறப்படும் முன் அம்பாங்கில் உள்ள ஒரு குடியிருப்பில் இருந்து போதைப்பொருளை எடுத்துக் கொண்டது தெரிய வந்துள்ளது. அத்தகவலின் அடிப்படையில் மேலும் சில விஷயங்களும் கண்டறியப்பட்டுள்ளதாக Bukit Aman போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் Datuk Hussein Omar Khan தெரிவித்தார்.
அது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதோடு அவ்விமானி இந்நாட்டில் எவ்வாறு போதைப்பொருள் விநியோகத்தைப் பெற்றார் , கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் உடமைகளுடன் அவர் எப்படி பாதுகாப்புச் சோதனையைக் கடந்து சென்றார், இந்தோனேசியாவில் செயல்படும் அனைத்துலக போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் அவருக்கு இருந்த தொடர்புகள் ஆகியவற்றைக் கண்டறியும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ஹுசேன் ஓமார் கான் கூறினார்.
ஜூலை 28 ஆம் தேதி அன்று காலை KLIA சென்று அவர் போதைப்பொருட்கள் இருந்த உடமைகளை விமான நிலையத்தில் பதிவு செய்து ஒப்படைத்துள்ளார். பின்னர் அவர் Kota Kinabaluவுக்கு விமானத்தில் சென்று, கோலாலம்பூர் திரும்பி, அதன் பிறகு அந்த உடைமைகளுடன் ஜகார்த்தா புறப்பட்டுச் சென்றதும் தெரிய வந்துள்ளது.
விசாரணையில் மலேசிய காவல் துறை இந்தோனேசிய காவல் துறை மற்றும் இந்தோனேசிய போதைப்பொருள் தடுப்பு வாரியத்துடன் ஒத்துழைப்பு மேற்கொண்டு வருகிறது.
காவல்துறை பதிவின்படி, 2012-ஆம் ஆண்டு முதல் விமானி ஒருவர் போதைப்பொருள் கடத்துபவராகச் செயல்பட்டு கைதானது இது நான்காவது சம்பவமாகும்.



