கோலாலம்பூர், டிசம்பர் 26 – தலைநகர், ஜாலான் சிலாங்கில், கடந்த வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, வணிக தளங்களில் இருந்து 85 ஆயிரம் ரிங்கிட் பணத்தை திருடியதாக நம்பப்படும், மூன்று போலீஸ் அதிகாரிகளின் தடுப்பு காவலை நீட்டிக்க, நீதிமன்றத்திடம் அனுமதி கோரப்படுமென, தேசியப் போலீஸ் படை துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை தெரிவித்தார்.
தவறான நடத்தை அல்லது குற்றச்செயல்களில் ஈடுபடும் எந்தவொரு அதிகாரிக்கும், போலீஸ் படை சாதகமாக செயல்படாது என அயோப் கான் சொன்னார்.
தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரஸாருடின் ஹுசைன் இதற்கு முன் கூறியதை போல, அவர்களிடம் ஒருபோதும் விட்டுக் கொடுக்கும் போக்கு கடைப்பிடிக்கப்படாது என அயோப் கான் உத்தரவாதம் அளித்தார்.
அவர்களுக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டால், முழு விசாரணை மேற்கொள்ளப்படும் என்றாரவர்.
கடந்த ஞாயிற்றுகிழமை, விசாரணைக்கு உதவும் பொருட்டு, குற்றவியல் சட்டத்தின் 380-வது பிரிவின் கீழ், 26,30 மற்றும் 35 வயதான மூன்று போலீஸ் அதிகாரிகள், டிசம்பர் 23-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 26-ஆம் தேதி வரை, நான்கு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டனர்.
தலைநகர், ஜாலான் சிலாங்கில், மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையின் போது, 85 ஆயிரம் ரொக்கப் பணம் காணாமல் போனதாக, கடந்த வெள்ளிக்கிழமை புகார் செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் கைதுச் செய்யப்பட்டனர்.
அதனை தொடர்ந்து, 63 ஆயிரத்து 500 ரிங்கிட் ரொக்கம், புரோடுவா மைவி கார் ஒன்று, இரு கைப்பேசிகள் உட்பட டையர்களையும், வாகன உபரிப் பாகங்களையும் வாங்கியதற்கான கட்டண அறிக்கைகளும் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.