மலேசியா

டுரியான் தோட்டத்தில் குடிலில் தீ விபத்து தாயும் மகளும் மரணம்

கிரிக், ஜன 2- கெரிக்கில் கம்போங் ஆயர் தாரோங்கில் டுரியான் தோட்டத்திலுள்ள குடில் ஒன்றில் நிகழ்ந்த தீ விபத்தில் பெண் ஒருவரும் மாற்றுத் திறனாளியான அவரது மகளும் மரணம் அடைந்தனர்.

அந்த தீவிபத்தில் 76 வயதுடைய ரஹ்மா ஜைனன், பார்வை இழந்த 43 வயதுடைய ரசிலாவதி முகமது என்பவரும் இறந்ததாக போலீசார் அடையாளம் கூறினர்.

அந்த பழத்தோட்டத்தில் இருந்த குடிலின் சமையல் அறையில் விடியற்காலை 4 மணியளவில் தீப்பிடித்ததாக Rahmah-வின் கணவரான 84 வயதுடைய முகமது அப்துல் லத்தீப் புகார் செய்ததாக கெரிக் போலீஸ் தலைவர் சுல்கிப்லி மஹ்மூத் தெரிவித்தார்.

தீயில் சிக்கிக் கொண்டவர்களை காப்பாற்றும் முயற்சியில் தோல்வி கண்டதை தொடர்ந்து அருகேயுள்ள பொதுமக்களின் உதவியை முகமது அப்துல் லத்தீப் நாடியதாக கூறப்பட்டது.

பிரதான சாலையிலிருந்து சிறிது தூரத்தில் அந்த குடில் இருந்துள்ளது. தங்களது குடும்பம் கெடா குவாலா கெட்டிலுள்ள தங்களது கிராமத்திற்கும் அந்த குடிலுக்கும் அடிக்கடி பயணம் செய்து வந்ததாக ரஹ்மாவின் 37 வயது மகன் சவுதின் தெரிவித்தார்.

தங்களது குடும்பத்திற்கு சொந்தமான அந்த பழத் தோட்டம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருவதாகவும் கடந்த வாரம் தான் தங்களது குடும்பத்தை சேர்ந்த எட்டு உறுப்பினர்களும் அங்கு கூடியதாக சவுதின் கூறினார்.

தங்களது குடும்பத்தை சேர்ந்த அனைவரும் குவாலா கெட்டிலுக்கு திரும்பிவிட்டதால் அந்த டுரியான் தோட்டத்தில் தமது பெற்றோரும், சகோதரியும் மட்டுமே தங்கியிருந்ததாக அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!