
சிலாங்கூர், ஜூன்-22-தஞ்சோங் கராங் பகுதியில் உள்ள Parit Serong தேசிய பள்ளி கட்டிடத்தில் நேற்று நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பான அவசர அழைப்பு அதிகாலை 12.50 மணியளவில் பெறப்பட்டதாகவும் உடனே, தஞ்சோங் காராங், கோலா சிலாங்கூர் மற்றும் சுங்கை பெசார் தீயணைப்பு நிலையங்களிலிருந்து 13 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) செயல்பாட்டு பிரிவு உதவி இயக்குநர் Ashrul Riezal Asbar தெரிவித்தார்.
பள்ளியின் ஆசிரியர் அறை மற்றும் அலுவலகப் பகுதி சுமார் 40 சதவீதம் தீயில் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தீ பள்ளியின் நிர்வாகப் பிரிவு மற்றும் வள மையப் பகுதிக்கும் பரவியது உறுதி செய்யப்பட்டது.
தீயணைப்பு நடவடிக்கை முழுமையாக அதிகாலை 3.56 மணிக்கு நிறைவடைந்தது.
இதனிடையே இந்தச் சம்பவத்தில் உயிரிழப்பு அல்லது காயம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



