கோலாலம்பூர், டிச 11 – போலீஸ் படைத் துணைத் தலைவர் அயோப் கான் மைடின் பிச்சையை கவிழ்ப்பதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக அண்மையில் வெளியான தகவல் தொடர்பில் உள்துறை அமைச்சு தலையிட்டு சிறப்பு விசாரணை குழுவை அமைக்க வேண்டும் என கிள்ளான் நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர் சார்ல்ஸ் சன்டியாகோ கேட்டுக்கொண்டுள்ளார்.
அயோப் கான் மற்றும் டாங் வாங்கி போலீஸ் தலைவர் நூர் டெல்ஹான் யஹாயாவை கவிழ்ப்பதற்கு குறிப்பிட்ட சில தரப்பினர் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் குறித்து போலீசிற்கு அப்பாற்படாத சுயேச்சை குழு விசாரணை நடத்த வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
குறிப்பிட்ட சில தரப்பு தம்மை கவிழ்ப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதோடு தமது கௌரவத்திற்கு எதிராக அவதூறு பரப்பி வருவதாக வியாழக்கிழமையன்று ஆய்வரங்கு ஒன்றில் கூறியிருந்தார்.
இது தொடர்பான விசாரணையை எதிர்நோக்குவதற்கும் தாம் தயாராய் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். போலீஸ்காரர்களுக்கு எதிராக புகார்களை அவர்களே விசாரிக்க முடியாது. தனியாக நியமிக்கும் சுயேச்சை குழுவினர்தான் விசாரணையை நடத்துவதற்கு பொருத்தமாக இருக்க முடியும் என சார்ல்ஸ் சன்டியாகோ சுட்டிக்காட்டினார்.