சீக், மார்ச்-1, கெடா போலீஸ் தலைமையகத்தின் சிறப்புப் பிரிவைச் சேர்ந்த போலீஸ்காரர் துப்பாக்கிச் சூடு பட்டு உயிரிழந்தார்.
சீக் மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட உலு மூடா காட்டுப் பகுதியில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
அக்காட்டுக்குள் அத்திமீறி நுழைந்து சட்டவிரோதமாக வேட்டையாடியவர்களுக்கு எதிரான தேடுதல் வேட்டையின் போது அவர் கொல்லப்பட்டார்.
சம்பவத்தின் போது, பொது மக்கள் உதவியுடன் அக்காட்டுக்குள் நுழைந்த போலீஸ் குழுவும், மத்திய கெடா காட்டு வள அலுவலகக் குழுவும் , அன்றைய இரவே அங்கேயே தங்கியுள்ளது.
மறுநாள் பிற்பகல் 3 மணிக்கு விசாரணைக்காக வெளியில் சென்ற உயிரிழந்தவரும் பொது மக்களில் இருவரும் மாலை 6.30 மணி வரை தங்குமிடம் திரும்பவில்லை; இதனால் சந்தேகத்தில் அவர்களைத் தேடி மற்றவர்கள் சென்ற போது, அம்மூவரும் பயணித்த வாகனம் மட்டுமே அங்கிருப்பதைக் கண்டனர்.
கடைசியில் துப்பாக்கிச் சூட்டுடன் அந்த போலீசையும், மற்ற இருவரையும் கண்டு மீட்டனர்; அம்மூவரும், இருட்டில் வழித் தவறியதாகத் தெரிகிறது.
சூடு பட்டு சீக் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது.
65 வயது சந்தேக நபர் கைதாகி குற்றவியல் சட்டத்தின் 304-வது பிரிவின் கீழ் விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
போலீஸ்காரரின் மரணத்திற்குக் காரணமான துப்பாக்கிச் சூட்டுக்கு பின்னால் இருப்பது யார் என்பதைக் கண்டறிய விசாரணை தொடருகிறது.