
பெங்களூரு, ஆகஸ்ட்-28,நேப்பாளம்–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில், ஈஷா அறக்கட்டளையைச் சேர்ந்த 80 பேர் காணாமல் போயிருப்பதாக சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.
கைலாஷ் மானசரோவர் யாத்திரையை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த இந்தக் குழுவினர், திபெத்தின் கிரோங் பகுதியில் உள்ள குடிநுழைவு அலுவலகத்தில் இருந்தபோது திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
காலை சுமார் 9.05 மணிக்கு குழுவின் தலைவரிடமிருந்து கடைசியாக தகவல் கிடைத்ததாகவும், அதற்கு 9 நிமிடங்களுக்குப் பிறகு பேரிடர் ஏற்பட்டதாகவும் சத்குரு தெரிவித்தார்.
மாயமானவர்களில் 34 ஆண்களும் 46 பெண்களும் அடங்குவர்.
அவர்கள் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட 22 நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்தச் சம்பவத்தை “மிகவும் பயங்கரமான, அசாதாரணமான பேரிடர்” எனக் குறிப்பிட்ட சத்குரு, நிலைமையை விவரிக்கும்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டார்.
வெள்ளத்தால் சாலைகள் மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாயமானவர்களை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.



