
பஹாங், செப்டம்பர் 9 – பஹாங் தெமர்லோவில் 2 வயது பெண் குழந்தையைத் துன்புறுத்தி, அதன் மூலம் குழந்தைக்கு உணர்வுரீதியான பாதிப்பு ஏற்படக்கூடும் வகையில் நடந்துகொண்ட முன்னாள் குழந்தை பராமரிப்பாளர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
26 வயதான அம்மாது, ஆகஸ்ட் 11ஆம் தேதி மெந்தக்காப், ஜாலான் கெராமாட் இண்டாவிலுள்ள (Jalan Keramat Indah) குழந்தை பராமரிப்பு மையத்தில் இந்தக் குற்றத்தைச் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் குற்றச்சாட்டை மறுத்து, தான் குற்றவாளி அல்ல என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த வழக்கு குழந்தைகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 50,000 ரிங்கிட் அபராதம் அல்லது 20 ஆண்டுகள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
இதையடுத்து நீதிமன்றம் 5,000 ரிங்கிட் பிணையை ஒரு உத்தரவாத நபருடன் அனுமதித்தது. மேலும், குழந்தை அல்லது சாட்சிகளைத் தொடர்புகொண்டு தொந்தரவு செய்யக்கூடாது என்றும், மாதத்திற்கு ஒருமுறை அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த வழக்கு மீண்டும் அக்டோபர் 14ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.



