
பெக்கான், ஜூன் -16-பகாங், பெக்கானில் போலி மருத்துவ விடுப்புச் சான்றிதழ்களை விற்பனை செய்த கும்பலைச் சேர்ந்த பெண் உட்பட 3 பேரை போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.
30 வயது மதிக்கத்தக்க அம்மூன்று சந்தேக நபர்களும் இப்போலிச் சான்றிதழ் விற்பனையில் வாடிக்கையாளர்களைத் தேடும் இடைத்தரகர்களாகச் செயல்பட்டு வந்ததாக பெக்கான் மாவட்ட போலீஸ் கூறியது.
இந்தக் கும்பல் ஒரு போலி மருத்துவச் சான்றிதழை 50 முதல் 200 ரிங்கிட் வரை விற்பனை செய்து வந்ததோடு, அரசாங்க மருத்துவமனை ஒன்றின் பழைய முத்திரையைப் பயன்படுத்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவற்றுக்கான போலிச் சான்றிதழ்களை வழங்கி வந்த முக்கிய நபரான, கிளினிக் ஒன்றில் பணிபுரியும் பெண் அரசு ஊழியரை போலீஸார் தற்போது தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இக்குற்றச்சாட்டு தொடர்பாக ஏமாற்றுதல் மற்றும் ஆவணப் போலிச் சட்டங்களின் கீழ் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.



