ஜோர்ஜ் டவுன், டிசம்பர் 22 – பினாங்கில், கடந்த செவ்வாய்கிழமை பெண் ஒருவரை கொடூரமாக வெட்டி கொலைச் செய்த சிறிது நேரத்தில் கைதுச் செய்யப்பட்ட ஆடவனுக்கு எதிராக இன்று குற்றம்சாட்டப்பட்டது.
எனினும், 29 வயது ஒங் கொக் பூ எனும் அவ்வாடவனிடமிருந்து இன்று வாக்குமூலம் எதுவும் பதிவுச் செய்யப்படவில்லை.
டிசம்பர் 19-ஆம் தேதி, காலை மணி 10.55 வாக்கில், பட்டர்வொர்த், ஜாலான் தாமான் சின் தாட் சாலையிலுள்ள, கடைக்கு முன்புறம், 42 வயது லீ யென் சுவான் எனும் பெண்ணை வெட்டி கொலை செய்ததாக அவனுக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சவப்பரிசோதனை மற்றும் இரசாயனத் துறை அறிக்கைக்காக காத்திருப்பதால், இவ்வழக்கு விசாரணை அடுத்தாண்டு மார்ச் 25-ஆம் தேதி செவிமடுக்கப்படுமென, மாஜிஸ்திரேட் சித்தி சுலைக்கா நோர்டின் கானி தெரிவித்தார்.
இன்று அவனுக்கு ஜாமின் எதுவும் கொடுக்கப்படவில்லை.
முன்னதாக, கடந்த செவ்வாய்கிழமை, சம்பந்தப்பட்ட பெண்ணை கொலை செய்த பின்னர் கடலில் குதித்த அந்த ஆடவன் பொதுமக்களால் காப்பாற்றப்பட்டான்.
அதனால் கால் முறிவுக்கு இலக்கான அவ்வாடவன் பினாங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், இன்று அந்த மருத்துவமனையிலேயே அவனுக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டது.
அதற்காக இன்று நண்பகல் மணி 12.45 வாக்கில், போலீஸ் புடைசூழ மாஜிஸ்திரேடும், நீதிமன்ற பதிவதிகாரியும் பினாங்கு மருத்துவமனைக்கு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.