![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/WhatsApp-Image-2024-03-06-at-6.22.01-PM-780x470.jpeg)
பட்டர் வெர்த் , மார்ச் 6 – Juru குடிநுழைவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நெரிசலாக இருப்பதோடு அங்குள்ளவர்கள் துன்புறுத்தப்படுவதாக வெளியான தகவலை பினாங்கு குடிநுழைவு தலைவர் Nur Zulfa மறுத்துள்ளார். நாடு முழுவதிலும் உள்ள குடிநுழைவு தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நெரிசலாக இருப்பதோடு துன்புறுத்தல் சம்பவங்கள் நடைபெற்று வருவதாக
HRW எனப்படும் மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் Nur Zulfa கருத்துரைத்தார். அண்மையில் Juru குடிநுழைவு தடுப்பு முகாமிற்கு வருகை புரிந்ததாகவும் அங்கு தடுத்து வைக்கப்பட்டவர்களில் எவரும் துன்புறுத்தப்பட்ட சம்பவங்கள் எதுவும் இல்லையென்பதோடு சுஹாக்காம் போன்ற மனித உரிமைகள் குழுவும் இதனை அறிந்துள்ளதாக Nur Zulfa தெரிவித்தார்.
தடுத்து வைக்கப்பட்டவர்களுக்கு தினசரி மூன்று அல்லது நான்கு முறை உணவுகள் வழங்கப்படுகின்றன. அங்கு துன்புறுத்தல் சம்பவங்கள் எதுவும் நடத்திருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார். மனித உரிமைக்கான கடப்பாடுகளை நாங்கள் எப்போதும் நிறைவு செய்து வருகிறோம் என பிறை குடிநுழைவு தலைமையகத்தில் Nur Zulfa செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஜூரு குடிநுழைவு தடுப்பு முகாமில் 500 பேரை தடுத்துவைக்கும் வசதி இருப்பதாகவும் தற்போது அங்கு 315 பேர் மட்டுமே இருந்துவருவதாகவும் அவர்களில் பெரும்பாலோர் வங்காளதேசிகள், மியன்மார் மற்றும் இந்தோனேசிய பிரஜைகளாவர் என அவர் கூறினார். 13 வயதுக்கு குறைந்த சிறார்கள் தங்களது தாயார்களுடன் அந்த தடுப்பு முகாமில் இருந்து வருகின்றனர். 13 முதல் 18 வயதுடைய பதின்ம வயதுடையவர்கள் பெரியோர்கள் தங்கியிருக்கும் அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக Nur Zulfa கூறினார்.