
கோலாலம்பூர், மே 5 – மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் மின்னல் பண்பலையும் இணைந்து ஏற்பாடு செய்த சிறுகதைப் போட்டியில் முதல் பரிசான மூவாயிரம் ரிங்கிட்டை திரு. டரிஷியன் ராஜா வென்றார். இரண்டாம் பரிசான இரண்டாயிரம் ரிங்கிட்டை திரு. கார்திகேசன் முருகையாவும் மூன்றாவது பரிசான ஆயிரம் ரிங்கிட்டை திருமதி. ஆதிலெட்சுமி பெருமாளும் தட்டிச் சென்றனர். முதல் மூன்று பரிசுகளை வென்ற எழுத்தாளர்களுக்கு தொடர்ப்புதுறை துணையமைச்சர் தியோ நீ சிங் பொன்னாடை, மாலை அணிவித்து சிறப்பு செய்து, ரொக்க பரிசும் நற்சான்றிதழும் வழங்கி சிறப்பித்தார்.
முதல் நிலை ஆறுதல் பரிசாக தலா 500 ரிங்கிட்டை பெற்ற ஏழு எழுத்தாளர்களுக்கும் இரண்டாம் நிலை ஆறுதல் பரிசாக தலா 300 ரிங்கிட்டை பரிசாக பெற்ற 10 எழுத்தாளர்களும் மின்னல் பண்பலைத் தலைவர் திருமதி ரோஹிணி, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முன்னள் தலைவர்களான ராஜேந்திரன், மன்னர் மன்னன், திரு. ஞான சைமன், ஆகியோர் பரிசுகளை எடுத்து வழங்கினார்.
ஆர் டி எம் அங்காசபூரி, பி.ரம்பி அரங்கில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் நூற்றுக்கும் அதிகமான எழுத்தாளர் கலந்து சிறப்பித்தனர். வெற்றிபெற்ற சிறுகதைகள் மின்னல் பண்பலையில் ஒலியேற்றப்படும். அதோடு அவை நூலாக தொகுக்கப்பட்டு நாடு முழுவதிலுமுள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு அன்பளிப்பாக வழங்கப்படும். பயிலரங்குகள் நடத்தி தரமான இலக்கியப் படைப்புகளை உருவாக்கி அவற்றை தமிழ்ப்பள்ளிகளில் கொண்டு சேர்க்கும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முயற்சி பாராட்டி துணையமைச்சர் தியோ நீ சிங் 20 ஆயிரம் ரிங்கிட் வழங்கினார்.
துணையமைச்சருக்கு மூத்த எழுத்தாளர்களின் ஒருவரான திருமதி நல்லம்மா இராமசாமியும்,
வானொலி பிரிவு இயக்குனரின் பிரதிநிதியாக கலந்து கொண்ட தேசிய மொழி பண்பலையின் நிர்வாகி புவான் சல்பியாவுக்கு திருமதி சாந்தி ராஜமாணிக்கம் மாலை அணிவித்து சிறப்பித்தார். இந்தப் போட்டிக்கும் அதற்கு முன்னர் சிறுகதைப் பயிலரங்கிற்கும் அனைத்து ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கிய மின்னல் பண்பலையின் தலைவர் திருமதி ரோஹிணி சுப்ரமணியத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சங்கத்தின் செயலவை உறுப்பினர் திருமதி நிர்மலாதேவி மாலை அணிவித்து சிறப்பித்தார்.