ஈப்போ, டிச 22 – பேரா மாநிலத்தில் கோவிட் -19 தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதோடு இதுவரை இத்தொற்றினால் 53 பேர் மரணம் அடைந்ததுள்ளதால் எதிர்வரும் தைப்பூசத்தின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என சுகாதார மற்றும் மனிதவள துறைக்கு பொறுப்பேற்றுள்ள பேரா ஆட்சிக் குழு உறுப்பினர் அ. சிவநேசன் கேட்டுக் கொண்டார்.
கோவிட் – 19 தொற்றின் தாக்கம் தனியவில்லை , அது இன்னமும் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு மட்டும் இந்நோய்க்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 7,294 ஆகும். இதில் 53 பேர் உயிரிழந்திருப்பது அச்சத்தை ஏற்படுத்துவதாக இருப்பதாக சிவநேசன் தெரிவித்தார்.
எனவே, கோவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்கும் நோய் தொற்று பரவுவதை தடுப்பதற்கும் பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் முக கவசம் அணியும்படி அவர் வலியுறுத்தினார். அதோடு ஜனவரி 25ஆம் தேதி ஈப்போவில் பேராவில் உள்ள கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் நடைபெறவிருக்கும் தைப்பூச விழாவில் சுமார் 3 லட்சம் பேர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுதோடு அதிகமான பக்தர்கள் திரள்வார்கள் என்று ஆலய நிர்வாகங்களும் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். எனவே, பாதுகாப்பை கருத்திற்கொண்டு அனைவரும் முகக் கவசத்தை அணிய வேண்டும் என சிவநேசன் கேட்டுக்கொண்டார்.
இதனிடையே பேராவில் மக்களின் சுகாதார நலனை கருத்தில் கொண்டு 137 மில்லியன் ரிங்கிட் வெள்ளி செலவில் கட்டப்பட்டு வரும் மருத்துவமனை அடுத்தாண்டு நவம்பர் மாதமும் , ஸ்ரீ இஸ்கந்தாரில் 148 மில்லியன் ரிங்கிட் செலவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய மருத்துவ அடுத்தாண்டு அக்டோபர் மாதமும் செயல்படும் என சிவநேசன் கூறினார்.