பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 8 – ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்தி, விபத்துக்கு காரணமான இரு ஓட்டுனர்களின் செயல், கடும் விமர்சனத்திற்கு இலக்காகியுள்ளது.
புரோட்டோன் வாஜா மற்றும் ஹோண்டா சிட்டி கார்களை உட்படுத்திய அவ்விபத்து தொடர்பான “டாஷ்கேம்” பதிவு வைரலாகி உள்ளதை அடுத்து, இணையப் பயனர்கள் பலர் அதனை சாடி வருகின்றனர்.
அந்த பதிவில், திடீரென வலது சாலையில் நுழையும் புரோட்டோன் வாஜா ஓட்டுனரின் செயலால் திடுக்கிடும் ஹோண்டா சிட்டி ஓட்டுனர், அதனை மிக நெருக்கமாக பின் தொடர்ந்து, சினமூட்டும் செயலில் ஈடுபடுவதை காண முடிகிறது.
அதன் பின்னர், அவ்விரு கார்களும் போட்டி போட்டுக் கொண்டு ஒன்றை ஒன்று முந்திச் செல்கின்றன. அப்பொழுது திடீரென எதிர்பாரா விதமாக, புரோட்டோன் வாஜா கார் ஹோண்டா சிட்டி காரின் பின்புறத்தை மோதுகிறது.
அதன் பின்னர், ஹோண்டா சிட்டி கார் வாஜாவை மோதுவதை தொடர்ந்து, அக்கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலை தடுப்பை மோதி விபத்துக்குள்ளாகிறது.
எனினும், அவ்விபத்து எங்கு நிகழ்ந்தது, ஓட்டுனர்களுக்கு என்னவானது என்ற விவரம் எதுவும் அந்த பதிவில், குறிப்பிடப்படவில்லை.
அந்த பதிவிற்கு கீழ், இணையப் பயனர்கள் பலரும், அவ்விரு ஓட்டுனர்களையும் கடுமையாக சாடி வருகின்றனர்.
குறிப்பாக, மிகவும் சுயநலமாக நடந்து கொண்ட வாஜா ஓட்டுனரின் செயல் கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறது.