
புத்ராஜெயா, மே-20 – மலேசியாவில் போதைப்பொருள் துஷ்பிரயோகம் கவலைக்குரிய நிலையை எட்டியுள்ளது.
பொது பாதுகாப்பு, பொருளாதார நிலைத்தன்மை மற்றும் நாட்டின் சமூக கட்டமைப்புக்கு அது கடுமையான அச்சுறுத்தலாக உருவாகியுள்ளதாக, துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி கூறினார்.
அண்மைய புள்ளிவிவரங்கள் படி, நாட்டில் 192,857 போதைப்பித்தர்கள் உள்ளனர்; அவர்களில் 61 விழுக்காட்டினர் 15 முதல் 39 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
ஆக மோசமாக கிளந்தானில் 100,000 பேருக்கு 1,130 போதைப்பித்தர்கள் உள்ளனர்.
அதையடுத்து திரங்கானுவில் 974 பேரும் பெர்லிஸில் 965 பேரும் கெடாவில் 898 பேரும் இருப்பதாக சாஹிட் சொன்னார்.
மொத்த எண்ணிக்கையில், 96 விழுக்காட்டினர் ஆண்கள்; பெரும்பாலும் சகாக்களுடனான நட்பு மற்றும் ஆர்வத்தால் இவர்கள் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகின்றனர்.
நேற்று போதைப்பொருள் துஷ்பிரயோகத்தை ஒழிப்பதற்கான அமைச்சரவைக் குழுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பிறகு அறிக்கை வாயிலாக துணைப் பிரதமர் இவ்விவரங்களைத் தெரிவித்தார்.
அதிகரித்து வரும் இச்சவாலை எதிர்கொள்ளும் முயற்சியாக, 2025-2027 போதைப்பொருள் தடுப்பு தொடர்புத் திட்டத்தை அக்கூட்டம் அங்கீகரித்துள்ளது.
நடத்தை மாற்றத்தை ஊக்குவித்தல், விழிப்புணர்வை அதிகரித்தல், கூட்டு முயற்சி வாயிலாக தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்துதல் என, விரிவான மற்றும் இலக்கு வைக்கப்பட்ட தடுப்புத் திட்டங்களை அது உள்ளடக்கியுள்ளது