பெய்ஜிங், ஏப்ரல்-15, சீனாவில் உள்ள நிறுவனமொன்று மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்குச் சிறப்பு சலுகையாக விடுமுறை அளித்து வருகிறது.
மன அழுத்தத்தில் இருக்கும் போது 10 நாட்கள் வரை அவர்கள் விடுப்பு எடுத்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது.
வேலையும் வாழ்க்கைச் சூழலும் சமச்சீராக இருப்பதை உறுதிச் செய்யும் வண்ணம் அவ்விடுப்பு வழங்கப்படுவதாக Pang Dong Lai எனும் அந்நிறுவனம் கூறியது.
அதே சமயம் நிறுவன ஊழியர்கள் மற்ற நாட்களில் நிம்மதியாகப் பணியாற்ற இது துணைப் புரியும் என்றும் அது நம்பிக்கைத் தெரிவித்தது.
“மகிழ்ச்சியாக இல்லாத நாட்களில் நீங்கள் வேலைக்கு வரத் தேவையில்லை. உங்கள் விடுமுறைக் கோரிக்கையை நிர்வாகம் நிராகரிக்க முடியாது; அப்படி நிராகரித்தால் அது நிறுவன விதிமீறல்” எனக் கூறி ஆச்சரியப்படுத்துகிறார் அதன் தலைவர் Yu Donglai.
அவரின் பேச்சைக் கேட்ட நெட்டிசன்கள் இவரல்லவா Boss என பாராட்டித் தள்ளுகின்றனர்.
குறிப்பாக ஒருவர், உங்கள் கம்பெனியில் வேலை காலி இருந்தால் சொல்லி அனுப்புங்கள், இப்போதே நான் வந்து சேர்ந்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
சீனாவில் வேலையிடக் கவலை குறித்து 2021-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில், 65 சதவீதத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலையில் சோர்வாகவும் மகிழ்ச்சியற்றவர்களாகவும் உணர்வதாகக் கண்டறியப்பட்டது.
குறைந்த ஊதியம், சிக்கலான தனிப்பட்ட உறவுகள் மற்றும் கூடுதல் நேர வேலைக் கலாச்சாரம் ஆகியவை அவர்களின் மனமகிழ்ச்சியின்மைக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.