பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 3 – மலேசியர்கள், மற்றவர்களை புரிந்து கொண்டு மதிப்பளிக்கும் உணர்வுதிறன் குறைந்தவர்களாக மாறிவிட்டனர்.
அதனால், மலேசியர்களிடையே பரஸ்பர புரிதலும், மரியாதையும் இருக்க வேண்டியது அவசியமென முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறியுள்ளார்.
பல்லின மக்கள் வாழும் மலேசியாவில், “அல்லா” காலுறை சர்ச்சை போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, மக்கள் ஒருவரை ஒருவர் மதித்து, வெவ்வேறு கலாச்சாரங்களை புரிந்து கொள்வது முக்கியம் என இஸ்மாயில் குறிப்பிட்டுள்ளார்.
மத விஷயங்கள் என வரும் போது, இஸ்லாம் மட்டுமல்ல, மற்ற மதங்களையும் நாம் மதிக்க வேண்டும்.
“நாம் முஸ்லீம்கள், மற்றவர்கள் நம்மை மதிக்க வேண்டும் என மட்டும் கூறமுடியாது. நாமும் மற்றவர்களை மதிக்க வேண்டும். சில சமயங்களில் நாம் மற்றவர்களின் சூழ்நிலையில், நம்மை நிறுத்து பார்ப்பது அவசியம்” என இஸ்மாயில் வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில், கேகே மாட்டில் விற்கப்பட்ட காலுறையில், பிற கடவுள்களின் திருவுருங்கள் இருந்திருந்தால், முஸ்லீம் அல்லாதவர்களும் அதுபோன்ற விஷயங்களில் சமரசம் ஆகியிருக்க மாட்டார்கள்.
அதனால், மதத்தையும், சமயத்தையும் உட்படுத்திய விஷயங்களில் நாம் கூடுதல் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என இஸ்மாயில் தெரிவித்தார்.
அச்சம்பவம் தொடர்பில், சம்பந்தப்பட்ட தரப்பினர் வெளிப்படையாக மன்னிப்புக் கோரியிருந்தனர். அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றம்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும், அது போதாது என இதுவரை நாட்டிலுள்ள மூன்று கேகே மாட் கடைகள் வெடிகுண்டு வீசி தாக்கப்பட்டுள்ளது வருத்தமளிப்பதாக இஸ்மாயில் சப்ரி சொன்னார்.
நாம் தனித்துவமானவர்கள், கொண்டாட பட வேண்டியவர்கள். அதனால், இனியும் அதுபோன்ற தாக்குதல்கள் தொடராமல் தடுக்க, அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என தாம் நம்புவதாக இஸ்மாயில் சப்ரி கூறியுள்ளார்.